Sunday, November 28, 2010

   மணிகண்டா,சரணம்.[மெட்டு.. க்ருஷ்ணக்ருஷ்ணா,முகுந்தா,ஜனார்தனா...]
=================================================================
    மணிகண்டா,சரணம்,சாமிஐயப்பா,..தர்ம
   சாஸ்தாவே,சரணம் சாமிஐயப்பா,
    வரவேணும் துணையாய் நீ ஐயப்பா,..எமக்கு
     தரவேணும் திருக்காட்சி ஐயப்பா.[மணிகண்டா.....]

                         ஒருமண்டல விரதம் அனுசரிப்போம்,.ஐந்து
                          புலன்களையும் அடக்கி இருப்போம் ,
                          போதைதரும் மதுவைத்தொடமறுப்போம்,..புலால்
                          உணவினையும் வெறுத்துத் துறப்போம்.[மணிகண்டா...]

   விதித்த நியமங்கள் யாவும் கடைபிடிப்போம்,எழும்
   இச்சைகள் யாவும் முறியடிப்போம்,
   இடுப்பினிலே கருபபுத்துணி உடுப்போம் ,தலையில்
   இருமுடியைத்தூக்கிவைத்து நடப்போம்.[மணிகண்டா..]

                         உன்னைக்காண மலையேறத்துணிந்தோம் ,..புனித
                        மாலையினை மார்பினிலே  அணிந்தோம்,
                        மனத்தாலுன் மலர்ப்பாதம் பணிந்தோம்.,.உந்தன்
                        நாமத்தையே ஓயாமல்  மொழிந்தோம்.[மணிகண்டா..]

    கட்டாந்தரையே பட்டுமெத்தையாய்ப்படுப்போம்,..கணந்
    தட்டாமலுன் நாமத்தையே ஜெபிப்போம்,
    கஷ்டங்களைச்சோதனையாய் நினைப்போம்,..அதை
    இஷ்டத்தோடு அனுபவித்துக் கடப்போம்.[மணிகண்டா..]

                    சூறாவளியோ,சீறும் சுனாமியோ..உன்பேர்
                    கூறியதும் மாருதமாய் மாறுமே.
                    காட்டில்வழிபறிக்கும் கள்வர்மனத்திலும் ..உன்பேர்
                    கேட்டதுமே பக்திரசம் ஊறுமே.[மணிகண்டா..]
========================================================================

      ஐயப்பா,நீ மெய்யப்பா.[மெட்டு..ஹிந்தி..மேரே மெஹபூப் நஜா]
=============================================================================================
     மாலரன்[மால்+அரன்] மைந்தா,ஐயப்பா,
      அபயந்தருவதுன் கையப்பா,
      பொன்னும்பொருளும் பொய்யப்பா,
      நீமட்டுமே மெய்யப்பா.[மாலரன்..]

                     மைந்தனாய் மடியினிலே நீவளர
                      பந்தளமன்னன் செய்ததென்ன மாதவமோ?
                     சிகரத்திலுன் கோயில் அமைந்திடவே
                     சபரிமலை செய்ததென்ன புண்ணியமோ?
                                  ,,                      ..                         ,,               ,,[மாலரன்..]
 
     மலையேறத்துணிந்து மார்பில் மாலையணிந்து,
     மதுமாமிசம்மறந்து,சுகம்துறந்து,
    விரதமிருந்து,இருமுடிசுமந்து,
     வருவோர்க்கு உன்காட்சி பெருவிருந்து.
                 ,,                    ,,                     ,,                  ,,       [மாலரன்..]

                     பதினெண்படியேறிகாணும் உன்காட்சி ,
                     பக்தர்களைப் பித்தர்களாய் மாற்றுதையா,
                    பொன்னம்பலமேட்டில் மகரஜோதியாய்நீ
                     மின்னக்கண்டு உன்னை மனம் போற்றுதையா,
                                     ,,                       ,,                    ,,                 ,,[மாலரன்..]

     தேடிவந்தோம் நாங்களுந்தன் சந்நிதியை,
      நாடிவந்தோம் நொந்தவாழ்வில் நிம்மதியை,
     பாடிவந்தோம் உன்னைப்போற்றுந்திருத்துதியை,
     வாடுமெமக்கருள்வாயே  நற்கதியை,
        ,,                         ,,                       ,,                  [மாலரன்.....]
=====================================================================









  



 
 


 

No comments:

Post a Comment