Sunday, September 18, 2011

தூது செல்லடி சகியே !







                                       


    சேதிசொல்லடி சகியே!..சண் முகனிடம் 
    தூது  செல்லடி சகியே !..என்  நிலைபற்றி [சேதி..]

               காலைச்சேவல்  கூவக்கேட்டால் 
            சேவல் கொடியோன் நினைப்பே ;
            ஓங்கார ஒலி கேட்டால் 
            காங்கேயனின்  நினைப்பே !

                ஆற்றில் நீராடும்போதும் 
          ஆறுமுகனின் நினைப்பே,
          குளித்துக் குங்குமமிட்டால் 
         குகனின் செம்முகம்  நினைப்பே ..

     சேதிசொல்லடி சகியே!..சண் முகனிடம் 
     தூது  செல்லடி சகியே !..என்  நிலைபற்றி [சேதி..]

           வேல்விழியில் மை இட்டால் 
         விசாகன்கை  வேல் நினைப்பே ;
         குழல்வாரிப் பின்னும்போதும் 
         மயில்வாகனன் நினைப்பே ..!

        குன்றத்தில்  மணந்தென்மன
        மஞ்சத்தில்   அமர்ந்தவனைக்
        காணாதென் வளைகழன்று
        மேகலை நெகிழ்ந்த தென்று..

    சேதிசொல்லடி சகியே!..சண் முகனிடம் 
    தூது  செல்லடி சகியே !..என்  நிலைபற்றி [சேதி..]

         குறமகள் கரம்பற்றி
         சுரமகளை மறந்தானோ?
          இந்தக்கணம் வள்ளியோடு
          கந்தகிரி வரணுமென்று ..

      சேதிசொல்லடி சகியே!..சண் முகனிடம் 
      தூது  செல்லடி சகியே !..என்  நிலைபற்றி [சேதி..]
      தூது  செல்லடி சகியே !..என்  நிலைபற்றி [சேதி..]