Tuesday, December 27, 2011


 

அருள்வாய் முருகா!

ஒருமுகப் படுத்திய மனத்திலே முருகா!உன்
திருமுகங்காட்டியருள்வாயே !

இருமணங்கொண்டவா ! வள்ளிதேவயாநியுடன்
தரிசனந்தந்தெனக்கருள்வாயே!

முக்கண்ணனுக்கு பிரணவப் பொருளினைப்
பக்குவமாய்ச்ச்சொன்ன பாலகுரு!

நான்மறை போற்றிடும் நாயகா, எனக்குள்ளே
ஞான ஒளி ஈந்தருள்வாயே!

பஞ்சாம்ருத அபிஷேகப் பிரியா! என்
நெஞ்செல்லாம் நீ நிறைந்திடுவாயே!

ஆறெழுத்துள்ள  உன்பேர் ஜெபித்தே கடை
தேறிடப்பேரருள் புரிவாயே!

ஏழேழ் பிறவியுமுன் இணையடி நிழலிலே
ஏழையேன் இருந்திட அருள்வாயே!

எட்டுக்குடிஅழகா!சட்டியின் நாயகா! 
பொற்றாள்களில் புகல்  தருவாயே! 

ஒன்பது  கோள்தரும் துன்பந்தவிர்த்தருளும்
தென்பழநியின்  தண்டாயுதனே !

பத்தரின் மித்ரனே!பித்தனின் புத்ரனே!
முக்தியெனும் நிலை அருள்வாயே !




Thursday, December 15, 2011

ஐயப்பசரித சாரம் [கதைப்பாட்டு]



ஐயப்பசரித சாரம்  [கதைப்பாட்டு]                   
             [மெட்டு..நந்த வனத்திலோர் ஆண்டி ]

சாமியே ஐயப்பா,சரணம் ..தர்ம
சாஸ்தாவே,மணிகண்டா,சரணம்,சரணம்...[சாமியே..]

"அரியரன் மைந்தனால்  மரணம்" ..என்ற
  விதியாலே மகிஷி எனும் பேர்கொண்ட அசுரி
எருமை முகத்தினளாய்  வந்து  ..எங்கும்
திரிந்தாளாம் யாவர்க்கும் துன்பங்கள் தந்து..

                      சாமியே ஐயப்பா,சரணம்

மகிஷியின் தொல்லைதாங்காமல்...முப்பத்து
முக்கோடி தேவரும் திருமாலை  வேண்ட ,
மோகினிவடிவில் முராரி ..அரனைக்
கூடவும் அவதரித்தான் குழந்தை  மணிகண்டன்..

                    சாமியே ஐயப்பா,சரணம்

மகவற்ற பந்தளமன்னன்..மழலை
மணிகண்டனைத்தனது மகனாய் வளர்க்க ,
பிணியுற்ற தாயின்வலி போக்க ..சேயும்
வனம் நோக்கி விரைந்தானாம்  புலிப்பாலுக்காக..

                            சாமியே ஐயப்பா,சரணம்

வனத்தினில் மகிஷியை  வீழ்த்தி  ..புலி
வாகனனாய் பாலகன் வருவதைக்கண்டு
"தெய்வமே இவன் '' என்றுணர்ந்து ..சரண்
 எய்தினர்  யாவரும் அவன்முன் விழுந்து .

                        சாமியே ஐயப்பா,சரணம்

அவதாரப்பணிமுடித்த அண்ணல் ..தான்
விடுங்கணை   விழுமிடம் கோயில் எழுப்ப
பணித்தபின் கணைவிட்டு மறைய ..சபரி
கிரிமீது கணை  விழக் கண்டானாம் வேந்தன்

                      சாமியே ஐயப்பா,சரணம்

மன்னன் முன் பொன்னம்பல மேட்டில்..அண்ணல் 
தோன்றியே சக்தி ஆயுதம் ஒன்றை அருள ,
 சமர்செய்த  அமரர்கோன்தன்னை ..திவ்ய  
சக்தி ஆயுதத்தாலே  வென்றானாம் வேந்தன்..

                   சாமியே ஐயப்பா,சரணம்

தெய்வ மகன்  பணித்தவாறே -மன்னன்  
 திருக்கோயில் பணிதனை மலையில்துவங்க,
அமரதச்சன் விஸ்வகர்மா..உதவி
அருளவும் முடிந்ததாம் ஆலயப்பணியும்..

             சாமியே ஐயப்பா,சரணம்

மகரசங்கராந்தி சனிவாரம் ..சபரி
மலைமீதிலே பரசுராமரும்  தோன்றி  
சுபமுஹூர்த்தவேளைதனிலே ..செய்து
அருளினராம்  ஐயப்ப விக்ரஹப்ரதிஷ்டை..

               சாமியே ஐயப்பா,சரணம்

இறைச்சேயை  மகனாய் வளர்த்த ..மன்னன்
இறைப் பணி  நிறைவடைந்து முடிந்ததை எண்ணி  
இன்பவெள்ளத்தில்  திளைத்தே ..புனித
பம்பாநதிக்கரையில் அடைந்தான் சமாதி..

              சாமியே ஐயப்பா,சரணம்

ஐயப்பசரிதையின் சாரம்..கூறும்
இக்கதைப்பாட்டிசைத்தவாறு மலையேறும்
அன்பர்க்கு மலராகும் முள்ளும்,.அவர்
உள்ளத்தில் பொங்கிடும் உத்சாக வெள்ளம்

               சாமியே ஐயப்பா,சரணம்

மணிகண்டன் மகிமையுரைக்கும் ..இந்த
கதைப்பாட்டைப் பாடுவோர்க்குண்டு நற்கதியே ,
பாடுவதை மெய்யுருகிக்கேட்கும்..பக்தர்
மனத்தினில் நிறைந்தே நிலைக்கும் நிம்மதியே.

சாமியே ஐயப்பா,சரணம் ..தர்ம
சாஸ்தாவே,மணிகண்டா,சரணம்,சரணம்..
சாமியே. ஐயப்பா சரணம்
சாமியே சபரீசா சரணம்
சாமியே மணிகண்டா சரணம் .









Friday, December 9, 2011

வந்தான் முருகன்




            வந்தான் முருகன்

அன்னையின் சக்திவேல் ஏந்திவந்தான் அழகன்,
அன்பர்தன் துன்பத்தை தீர்க்கவந்தான் முருகன்;
                                                   தீர்க்கவந்தான் முருகன்!

தந்தைதாயினைத் துறந்தான் -தென்
பழநிநோக்கிப் பறந்தான்;
தண்டபாணியாய் அமர்ந்தான்,-தூய
அன்பர்க்கு அருள்புரிந்தான்.
ஷண்முகன் ,சிவகுகன்,பாவைவள்ளியின் நாயகன்.

அன்னையின் சக்திவேல் ஏந்திவந்தான் அழகன்,

 பிள்ளையாருக்குப் பின்னவன் -,பிரணவப்
பொருளை விளக்கிச்சொன்னவன்;
தேவயானி மனமோகனன்,-வண்ணத்
தோகைமயில் வாகனன்.
ஷண்முகன் ,சிவகுகன்,பாவைவள்ளியின் நாயகன்

அன்னையின் சக்திவேல் ஏந்திவந்தான் அழகன்,

 பரமனின் ப்ரியபுதல்வன்,-அவன்
சுரசைன்யத்தின் முதல்வன்;
அபிராமவல்லி நந்தனன் ,-தீய
தாரகாசுர மர்த்தனன் .
ஷண்முகன் ,சிவகுகன்,பாவைவள்ளியின் நாயகன்.

அன்னையின் சக்திவேல் ஏந்திவந்தான் அழகன்,
அன்பர்தன் துன்பத்தை தீர்க்கவந்தான் முருகன்;
                                                   தீர்க்கவந்தான் முருகன்!

Monday, November 28, 2011

ஓம் சரவணபவ



                 ஓம் சரவணபவ

'ஸ்டார்  விஜய் 'இல் காலையில்  'அருணாசலசிவ....' கேட்டு
ரசித்துக்கொண்டிருக்கையில்  அதே ராகத்தில்  முருகனைப்பாடத்
தோன்றியது! எழுதிவிட்டேன் ;பாடிப்பாருங்களேன்!  )


சரவணபவ  எனும் முருகனின் நாமமாம்
திருமந்திரந்தனை  தினமோதுவோம்;
கருணையே வடிவமாம்  குருகுகன் பொழிந்திடும்
அருள்மழைதனில் நாம்  நனைந்தாடுவோம்!

ஒம்சரவணபவ  ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ

பண்டார வேசனாம்,ஞானப்ரகாசனாம்,
தென்பழனிவாசனின்  பதம் நாடுவோம்;
குஞ்சரி நேசனாம்,குன்றக்குமரேசனாம்,
கொஞ்சும் வஞ்சிதாசனைக் கொண்டாடுவோம்!

ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ

சரவணபவ எனும் முருகனின் நாமமாம்
திருமந்திரந்தனை தினமோதுவோம்;
கருணையே வடிவமாம் குருகுகன் பொழிந்திடும்
அருள்மழைதனில் நாம் நனைந்தாடுவோம்!

தகதகதகவென நிகரற்ற ஒளியுடன்
திகழ்கின்ற  வேல்தாங்கும் தயாபரன்,
ஜெகம்புகழ் ஷண்முகன்,மகிமையை எண்ணியெண்ணி
அகமகிழ்ந்தவனைத் துதிபடுவோம் !

ஒம்சரவணபவ,ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ

சரவணபவ எனும் முருகனின் நாமமாம்
திருமந்திரந்தனை தினமோதுவோம்;
கருணையே வடிவமாம் குருகுகன் பொழிந்திடும்
அருள்மழைதனில் நாம் நனைந்தாடுவோம்!

ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ

Wednesday, November 16, 2011

வேல் மகிமை

''மந்திரமாவது நீறே'' என்று  தொடங்கும்
திருநீற்றுப்பதிகப் பாடலைப்படித்ததும் அதே
நடையில் முருகனின் வேலைத்     துதிபாட
வேண்டும் என்று என்மனத்தில் எழுந்த   
விருப்பத்தின் விளைவு  கீழே! ]          
   


  வேல் மகிமை
(கந்தன் துதிப்பாடல்கள் வலையில் நம் சுப்புசார்
வேல் மகிமையைப்  பாடக்கேட்டு மகிழுங்கள் )


மந்திரமாவது வேலே,மனச்
சாந்தியளிப்பதும் வேலே!
சுந்தரமாவது வேலே,சுக
வாழ்வு கொடுப்பதும் வேலே!
தந்திரமாவது வேலே,தன
பாக்கியம் தருவதும் வேலே!
செந்தூரிலே கோயில்கொண்ட கந்தன்
ஏந்திநிற்கும்சக்திவேலே!

ஆதரவாவது வேலே,அல்லல்
அகற்றியருள்வதும் வேலே!
சோதனையாவையுந்தாண்டி நம்மைச்
சாதிக்கச்செய்வதும் வேலே!
பேதங்கள் யாவையும்போக்கி நெஞ்சில்  
நேயம் நிறைப்பதும் வேலே!
வேதங்கள் ஓதிடும் நாதன் விழி
ஜோதி விசாகனின் வேலே!

புத்தி திருத்திடும் வேலே,பொய்மை
போக்கும் புனிதனின் வேலே!
சக்தி  பெருக்கிடும் வேலே,சித்த
சுத்தமளித்திடும் வேலே!
பக்தியைத்தூண்டி மனத்தை மிகப்
பரவசமாக்கிடும் வேலே!
பித்தன் நெற்றிவிழிப்பொறியாய் உதித்த
முத்துக்குமரன் கைவேலே!

இட்டமாய் நாடிவந்தோரின் கட்டம்
யாவும் களைந்திடும் வேலே!
சட்டித்திதிக்கான தெய்வம் கந்தன்   
பொற்கரம்  தாங்கிடும் வேலே!
துட்டரைவென்று துறத்தித் தூயோர்
துயரந்துடைத்திடும் வேலே!
பட்டரின் சொல்லை மெய்ப்பித்த
அபிராமியளித்த அருள் வேலே !

Friday, November 11, 2011

ஞானமருள்வாய்,வேலவா!

       ஞானமருள்வாய்,வேலவா! 



நீலகண்டன் நேத்திரத்தில் உதித்தவேலவா!
நீலமயில் வாகனனே வேதமூலவா,
நீலமேகவண்ணன் மருகா,வேகமாக வா-நீ
வேலைஏந்தி என்னுள் ஞான ஒளியூட்ட வா!

வள்ளலே உன்திருமந்திரம் இனித்திடும் செந்தேன்,
உள்ளத்திலே அதனையோதி காத்துக் கிடந்தேன் ;

ஓம் சரவணபவா!
ஓம் சரவணபவா!
ஓம் சரவணபவா!

வள்ளலே உன்திருமந்திரம் இனித்திடும் செந்தேன்,
உள்ளத்திலேஅதனையோதிகாத்துக்கிடந்தேன் ;

காங்கேயா,கண்முன்வராமல் காக்கவைப்பதேன்?
ஏங்கும் ஏழை எந்தனுக்கு இறங்க மறுப்பதேன்?..நீ
ஏங்கும் ஏழை எந்தனுக்கு இறங்க மறுப்பதேன்?

 நீலகண்டன் நேத்திரத்தில் உதித்தவேலவா!
நீலமயில் வாகனனே வேதமூலவா,
நீலமேகவண்ணன் மருகா,வேகமாக வா-நீ
வேலைஏந்தி என்னுள் ஞான ஒளியூட்ட வா!

ஏரகத்தில் பிரணவத்துக்கு விளக்கினாய் பொருள் ,
ஆறுமுகா,அகற்றிடுவாய்,அகத்துப்பேரிருள்;
ஞானமற்ற ஈனன் எனக்குன் பாதமே புகல்  ;
தீனதயாளா,பொழிவாய் என்மேல் பேரருள்!..ஹே
தீனதயாளா,பொழிவாய் என்மேல் பேரருள்!

நீலகண்டன் நேத்திரத்தில் உதித்தவேலவா!
நீலமயில் வாகனனே வேதமூலவா,
நீலமேகவண்ணன் மருகா,வேகமாக வா-நீ
வேலைஏந்தி என்னுள் ஞான ஒளியூட்ட வா!

Monday, October 31, 2011

தரிசனம் தா,கந்தா!

          தரிசனம் தா,கந்தா!
 [மெட்டு..ஆர்ட் ஆப் லிவிங் பஜன்.."கோபாலா,கோபாலா.".]


 

கோலமயில் ஏறிவரும் வேலா!குணசீலா!
நீலகண்டன் நுதற்கண்ணிலுதித்த சிவபாலா !
அபிராமவல்லி நந்தனா,வள்ளிமனோஹரா,வா!வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!
வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!

ஆவினன்குடியின் கோவணாண்டியே!வா!
ஏரகத்தின் ஸ்வாமிநாதஸ்வாமியே !வா!
சீரலைவாய் செந்தில்நாதனே!வா!
பரங்குன்றத்து சுரமகள் நாயகா!வா!
பழமுதிர்ச்சோலை வஞ்சி நேசா!வா!
திருத்தணிகைமலை வள்ளீசா!வா!

கோலமயில் ஏறிவரும் வேலா!குணசீலா!
நீலகண்டன் நுதற்கண்ணிலுதித்த சிவபாலா !
அபிராமவல்லி நந்தனா,வள்ளிமனோஹரா,வா!வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!
வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!

காங்கேயா!கந்தா!கண்மணியே!வா,
ஓங்காரம் விளக்கிய குருகுகா!,வா,
ஓங்கி உலகளந்தவனின் மருகா!வா,
ஏங்கும் எங்களுக்காக இறங்கி நீ வா...இன்னும்
தாங்காதையா,திவ்யதரிசனம் தா!

கோலமயில் ஏறிவரும் வேலா!குணசீலா!
நீலகண்டன் நுதற்கண்ணிலுதித்த சிவபாலா !
அபிராமவல்லி நந்தனா,வள்ளிமனோஹரா,வா!வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!
வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!

Friday, October 28, 2011

அன்பர்க்கருள்புரிவாய்,கந்தா!

அன்பர்க்கருள்புரிவாய்,கந்தா!

  
பன்னிருகரத்தவா! திருநீறு தரித்தவா!
தென்னகம் வந்தமர்ந்தருள்வோனே!
உன்னடிபற்றியே பணிந்திடும் பக்தரின்
முன்னைவினையறுத்தருள்வாயே !

தடைகள்தகர்த்திடும் கணபதி தம்பியே!
விடைவாகனனின் குருநாதா!
படைவீடாறுடைக்கடவுளே! பக்தர்க்கு
அடைக்கலம் தந்தருள் புரிவாயே!

மத்தமாலை முடிசூடிடும் பித்தனின்
புத்திரமணியே! முத்தையா!
சக்திவேலாயுதா! நித்தமுனைத் தொழும்
பக்தர்க்கு முக்திதந்தருள்வாயே !

மாசில்மதியோடு நதிமுடிசூடிடும்
ஈசனிடமுறை உமையாள் மைந்தா!
நேசமாய் நிதமுமுன் நாமம் நவின்றிடும்
தாசர்க்கு தரிசனம் தருவாயே!

பாரதப்போரினில் பார்த்தனின்தேருக்கு
சாரதியான மாதவன்  மருகா!
ஆறேழுத்துள்ள உன்பேரினை பக்தியாய்க்
கூறுமன்பர்க்கருள்புரிவாயே !

வேட்டுவன்மகளையும் வாசவன்மகளையும்
நாடி மணங்கொண்ட நாயகனே!
ஈடிணையற்ற உன் இணையடிபோற்றியே
பாடுமன்பர்க்கருள்புரிவாயே !
=============================================================

Saturday, October 15, 2011

துணைவன்

                                           

["வேயுறு தோளிபங்கன்" என்று தொடங்கும் 'கோளறுபதிகம்' (சிவத்துதி)போல் முருகனைத் துதிபாட என்மனத்தில் பொங்கிய ஆசையின் விளைவு கீழுள்ள முருகன் துதி ! அதே மெட்டில் பாடிப்பார்க்கலாம்!துணைவனை க்ளிக்கலாம்!]


               துணைவன்


அன்னை அபிராமிபாலன்,தென்பழநிவேலன்,
ஆண்டிபண்டாரக்கோலன்,
தண்டாயுதபாணியாக வெண்ணீறணிந்தென்
இதயம்பதிந்த அதனால் ,
ஒன்பதுகோள்களும் உற்ற நண்பராய் மாறி
துன்பந்தவிர்த்தருளும் ;
இன்னல் என்பதே இல்லை,இன்பமே என்றும்
அண்ணலின் பொன்னடி பணிந்தால் !


 
திருவேரகத்தில் பிரணவ விளக்கமளித்த
பரமகுரு ஸ்வாமிநாதன் ,
குறுநகைசிந்தும் சிறுகுழந்தையாய் எந்தன்
இதயம்பதிந்த அதனால்,
வருகின்ற நாட்கள்யாவும் திருநாட்களாகும்;
ஒருநாளும் சிறுமை இல்லை;
பொருள்வளம் பெருகியோங்கும், வறுமையும் நீங்கும்,
குருநாதன் திருவடி பணிந்தால் !


அமரரைக்காக்கப் போரில் அசுரரையழித்து
அ மர்ந்ததிருச்செந்தில்வேலன்
நிமலநீறீந்து நோய்கள் நீக்குந்தெய்வமாய் எந்தன்
இதயம்பதிந்த அதனால் ,
ஈசனும் கேசவனும் அயனும் வாசவனும்
அன்போடு ஆசியருள்வர்;
பாசம்வீசும் காலனும் ,காவலனாய் ஆவான்
வேலவனின் விரைகழல் பணிந்தால் !


திருப்பரங்குன்றந்தனிலே மணக்கோலம் பூண்ட
சரவணபவன் சண்முகன்
சுரமகள் தேவயானை மணவாளனாய் என்
இதயம் பதிந்த அதனால்
உமையவள்,கமலை,வாணி உவந்தருள்வர் ஆசி;
நமதுநிழ்ல்போல் துணைவருவர்;
மனம்போல மாங்கல்யமும் ,மணவாழ்வும் அமையும்
குமரேசன் மலர்க்கழல் பணிந்தால் !


கிழவனாய் வள்ளியோடு லீலைகள்செய்த
பழமுதிர்ச்சோலை வேலன்
கஜம் கண்டோடும்வள்ளிக்கு சரணளிப்பவனாய் எந்தன்
இதயம்பதிந்த அதனால்
கொடியகாட்டுவிலங்கும் கொட்டுங்கருந்தேளும்
படமெடுத்தாடும்பாம்பும்
வழிவிட்டு விலகியோடும்,இடர்யாவும் நீங்கும்
அழகனின் திருக்கழல் தொழுதால் !


தணிகாசலந்தனிலே குறமகள்தன்னை
மணங்கொண்ட வேல்முருகன்
வள்ளிகைத்தலம்பற்றும் மணவாளனாய் என்
இதயம்பதிந்த அதனால்
மனபலம் கூடும் தேகநலனும் சீராகும்
மனமலம் மாய்ந்தகலும் ;
நினைத்தவை நடந்தேறும்,தனதான்யம் சேரும்
புனிதனின் பொன்னடி பணிந்தால் !



           ஓம் சரவணபவா !

          ஓம் சரவணபவா !

          ஓம் சரவணபவா !

Wednesday, October 5, 2011

கொலுவிருப்பாய் கலைவாணி !


 
                                     


                                  வாகீஸ்வரி ! வீணாபாணி !
                                  கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி ! 

                                  தூயவெண் தாமரை  வாசினியே!
                                  மாசில் வெண்  அன்ன வாகினியே!
                                  படைக்கும் கடவுளின் பத்தினியே!
                                  கலைகள் யாவுக்கும் அதிபதி நீயே!

                                 வாகீஸ்வரி ! வீணாபாணி !

                                 கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !


                                 ஏட்டுச்சுவடியும் அக்ஷரமாலையும்
                                 ஏந்தும் கரமுடைய எங்கள் தாயே !
                                 ஸ்ருங்ககிரி அமர் சாரதையே !
                                 வந்தருள்புரிவாய் பாரதியே!

                                 வாகீஸ்வரி ! வீணாபாணி !

                                 கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !

                                  வெண்ணுடையணிந்து ஒளிர்பவளே!
                                  மெய்ஞானம் தரும் கலைமகளே!
                                  உன்னருட்பார்வை ஒருகணம் பட்டால்
                                  மந்தியும் மேதையாய் மாறிடுமன்றோ?


                                 வாகீஸ்வரி ! வீணாபாணி !

                                 கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !

Sunday, September 18, 2011

தூது செல்லடி சகியே !







                                       


    சேதிசொல்லடி சகியே!..சண் முகனிடம் 
    தூது  செல்லடி சகியே !..என்  நிலைபற்றி [சேதி..]

               காலைச்சேவல்  கூவக்கேட்டால் 
            சேவல் கொடியோன் நினைப்பே ;
            ஓங்கார ஒலி கேட்டால் 
            காங்கேயனின்  நினைப்பே !

                ஆற்றில் நீராடும்போதும் 
          ஆறுமுகனின் நினைப்பே,
          குளித்துக் குங்குமமிட்டால் 
         குகனின் செம்முகம்  நினைப்பே ..

     சேதிசொல்லடி சகியே!..சண் முகனிடம் 
     தூது  செல்லடி சகியே !..என்  நிலைபற்றி [சேதி..]

           வேல்விழியில் மை இட்டால் 
         விசாகன்கை  வேல் நினைப்பே ;
         குழல்வாரிப் பின்னும்போதும் 
         மயில்வாகனன் நினைப்பே ..!

        குன்றத்தில்  மணந்தென்மன
        மஞ்சத்தில்   அமர்ந்தவனைக்
        காணாதென் வளைகழன்று
        மேகலை நெகிழ்ந்த தென்று..

    சேதிசொல்லடி சகியே!..சண் முகனிடம் 
    தூது  செல்லடி சகியே !..என்  நிலைபற்றி [சேதி..]

         குறமகள் கரம்பற்றி
         சுரமகளை மறந்தானோ?
          இந்தக்கணம் வள்ளியோடு
          கந்தகிரி வரணுமென்று ..

      சேதிசொல்லடி சகியே!..சண் முகனிடம் 
      தூது  செல்லடி சகியே !..என்  நிலைபற்றி [சேதி..]
      தூது  செல்லடி சகியே !..என்  நிலைபற்றி [சேதி..]

Wednesday, August 31, 2011

ஷோடசநாம மகிமை




ஷோடசநாம மகிமை



வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                          சுமுகா! உந்தன் சுந்தரநாமம்
                         செப்பிட சித்திக்கும் ஞானப்ரகாசம்;
                         ஏகதந்தா! உன் இணை இல்லா நாமம்
                         இசைப்போர் உள்ளத்தில் பொங்கும்பரவசம்.!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                           கபிலா! உந்தன் கனிரசநாமம்
                           கூறிடக்கிடைக்கும் உன் கருணாகடாக்ஷம்;
                           கஜகர்ணா! உன்கவின்மிகுநாமம்
                           பாடிடக்கூடிடும் முடிவினில் மோக்ஷம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                            லம்போதரா!உன் நிர்மல நாமம்
                            நவின்றிட நிலைத்திடும் நித்யானந்தம்;
                           விகடா!உந்தன் உன்னத நாமம்
                           உரைப்பவருள்ளத்தில் உறைந்திடும் சாந்தம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                              விக்னராஜா!உன் நிகரில்லாநாமம்
                              பயின்றிடக்கரைந்திடும் பண்ணிய பாவம்;
                              விநாயகா!உன் இன்சுவைநாமம்
                              மொழிந்திட முறிந்திடும் முன்வினை யாவும்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                தூமகேது!உன் தேவாம்ருத நாமம்
                                தோத்தரித்தாலுண்டு துக்கநிவாரணம்;
                                கணாத்யக்ஷா!உன் கல்கண்டுநாமம்
                               ஒன்றே விக்னவிநாச காரணம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                 பாலச்சந்த்ரா!உன் புண்ணியநாமம்
                                 பயின்று பணிந்தோம் உன்மலர்ப்பாதம்;
                                 கஜானனா!உன் அருமை நாமம்
                                அதற்கிணை ஒன்றெனில் அது சதுர்வேதம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                 வக்ரதுண்டா!உன் ஒப்பில்லா நாமம்
                                 ஓதுவோர் வாழ்வினில் ஒழிந்திடும் தொல்லை;
                                 சூர்ப்பகர்ணா! உன் சுப நாமம்
                                 சொல்பவர்க்கென்றும் சோகமே இல்லை!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                 ஹேரம்பா!உன் ஜகம்புகழ்நாமம்
                                 ஜெபிப்போர் குறைகள் யாவையும் தீரும்;
                                 ஸ்கந்தபூர்வஜா!உன் திருநாமம்
                                 ஸ்மரிப்போர் வேண்டியவை நிறைவேறும்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !









Friday, August 5, 2011

தாயே!தாள் பதிப்பாய்!


தாயே!தாள் பதிப்பாய்!
[கலாவின் குரலில் இந்தபாட்டைக்கேட்டு மகிழுங்கள் ]

மின்னல் முகிலிடையே பளிச்சிடுவதுபோல்


கன்னங்கரு முடியிடையே வகிடு மின்ன,


கன்னல்கரத்தாளாய்க் காணும் அபிராமி!


உன்பொன்னடி சென்னியில் பதித்துவிடு!




விடம் விழுங்கிய விடையவன் மேனியிலே


இடப்பாகம் அபகரணம் செய்தவளே!


மதங்கன் மகளே!உந்தன் மலரடியால்


மடமதியேன் சென்னியை மிதித்துவிடு!




அத்தையாய்க் குறமகள் உறவாடுகிறாள்!


தத்தையும் தொற்றிக்கொண்டதே உன் தோளில்!


சொத்தையோ,சுக வாழ்வையோ வேண்டவில்லை;


பக்தைமேலுந்தன் தாள் பட்டால் போதுமம்மா!




அன்று பிதற்றிய பட்டருக்குதவிடவே


விண்ணில் முழுமதி காட்டி நீ வியக்கவைத்தாய்!


இன்று பாட்டென எண்ணிப் பிதற்றி நிற்கும்


எந்தன் சென்னியில் தாயே!தாள் பதிப்பாய்!

Friday, July 29, 2011

                 எங்க  ஆத்தா !

                               

ஆடியிலே ஆத்தா !ஒன்ன  
தேடி நாங்க ஓடிவந்தோம் ;
கூடி கூடிப் பாடிவந்தோம் செல்லாத்தா!..நீ
 நேராவந்து எங்க முன்னே நில்லாத்தா!

ஏழை பாழை எல்லாம் ஒண்ணா
கூழு வச்சிக் கும்பிடறோம்;
தாழ வந்து ஏத்துக்கடி செல்லாத்தா!..காலந்
தாழ்த்தாம கண்ணுமுன்னே நில்லாத்தா!..காலந்
தாழ்த்தாம கண்ணுமுன்னே நில்லாத்தா!


ஆடியிலே ஆத்தா !ஒன்ன
தேடி நாங்க ஓடிவந்தோம் ;
கூடி கூடிப் பாடிவந்தோம் செல்லாத்தா!..நீ  
நேரா வந்து எங்க முன்னே நில்லாத்தா!

பொன்ன வெக்கும் எடத்தில் சின்ன
பூவவச்சிப் பூசை பண்ணோம்;
மாடி,கோடி வேண்டலடி செல்லாத்தா!..நீ
மனசவுட்டு மறையாம  நில்லாத்தா..நீ
மனசவுட்டு  மறையாம  நில்லாத்தா!

ஆடியிலே ஆத்தா !ஒன்ன

தேடி நாங்க ஓடிவந்தோம் ;
கூடி கூடிப் பாடிவந்தோம் செல்லாத்தா!..நீ
நேராவந்து எங்க முன்னே நில்லாத்தா!



[ கே..ஆர் எஸ் இன் படவேடு அம்மன் பதிவும்,கவிநயாவின் 
'ஆடியிலே கூழு வச்சு' பதிவும்  ஏற்படுத்தியபாதிப்பின் விளைவு என்னுடைய ஆத்தா பாட்டு!]


Sunday, June 26, 2011

தாயே!நான் உன் சேய்!


   தாயே!நான் உன் சேய்!

தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!

பிறவிக்கடலில் மூழ்கக் கண்டும்
பாராமுகம் ஏனம்மா?
புகல் வேண்டிக் கதறும் பிள்ளைக்கு
பெற்றவள் பதில் 'மௌனமா?'

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

முன்வினைப் பயன் தந்தபின்னும்
சினம் ஏன் தணியவில்லையோ?
திருந்தி வருந்தும் குழந்தை கண்டு
இதயம் இளகவில்லையோ?

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

துட்டப்பிள்ளையைத் திட்டியடித்துத்
திருத்தும் உரிமை உனக்குத்தான்!
தாயுன் மடியில் புகுந்து கொஞ்சும்
உரிமை எனக்கே எனக்குத்தான்!

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]