Thursday, December 15, 2011

ஐயப்பசரித சாரம் [கதைப்பாட்டு]



ஐயப்பசரித சாரம்  [கதைப்பாட்டு]                   
             [மெட்டு..நந்த வனத்திலோர் ஆண்டி ]

சாமியே ஐயப்பா,சரணம் ..தர்ம
சாஸ்தாவே,மணிகண்டா,சரணம்,சரணம்...[சாமியே..]

"அரியரன் மைந்தனால்  மரணம்" ..என்ற
  விதியாலே மகிஷி எனும் பேர்கொண்ட அசுரி
எருமை முகத்தினளாய்  வந்து  ..எங்கும்
திரிந்தாளாம் யாவர்க்கும் துன்பங்கள் தந்து..

                      சாமியே ஐயப்பா,சரணம்

மகிஷியின் தொல்லைதாங்காமல்...முப்பத்து
முக்கோடி தேவரும் திருமாலை  வேண்ட ,
மோகினிவடிவில் முராரி ..அரனைக்
கூடவும் அவதரித்தான் குழந்தை  மணிகண்டன்..

                    சாமியே ஐயப்பா,சரணம்

மகவற்ற பந்தளமன்னன்..மழலை
மணிகண்டனைத்தனது மகனாய் வளர்க்க ,
பிணியுற்ற தாயின்வலி போக்க ..சேயும்
வனம் நோக்கி விரைந்தானாம்  புலிப்பாலுக்காக..

                            சாமியே ஐயப்பா,சரணம்

வனத்தினில் மகிஷியை  வீழ்த்தி  ..புலி
வாகனனாய் பாலகன் வருவதைக்கண்டு
"தெய்வமே இவன் '' என்றுணர்ந்து ..சரண்
 எய்தினர்  யாவரும் அவன்முன் விழுந்து .

                        சாமியே ஐயப்பா,சரணம்

அவதாரப்பணிமுடித்த அண்ணல் ..தான்
விடுங்கணை   விழுமிடம் கோயில் எழுப்ப
பணித்தபின் கணைவிட்டு மறைய ..சபரி
கிரிமீது கணை  விழக் கண்டானாம் வேந்தன்

                      சாமியே ஐயப்பா,சரணம்

மன்னன் முன் பொன்னம்பல மேட்டில்..அண்ணல் 
தோன்றியே சக்தி ஆயுதம் ஒன்றை அருள ,
 சமர்செய்த  அமரர்கோன்தன்னை ..திவ்ய  
சக்தி ஆயுதத்தாலே  வென்றானாம் வேந்தன்..

                   சாமியே ஐயப்பா,சரணம்

தெய்வ மகன்  பணித்தவாறே -மன்னன்  
 திருக்கோயில் பணிதனை மலையில்துவங்க,
அமரதச்சன் விஸ்வகர்மா..உதவி
அருளவும் முடிந்ததாம் ஆலயப்பணியும்..

             சாமியே ஐயப்பா,சரணம்

மகரசங்கராந்தி சனிவாரம் ..சபரி
மலைமீதிலே பரசுராமரும்  தோன்றி  
சுபமுஹூர்த்தவேளைதனிலே ..செய்து
அருளினராம்  ஐயப்ப விக்ரஹப்ரதிஷ்டை..

               சாமியே ஐயப்பா,சரணம்

இறைச்சேயை  மகனாய் வளர்த்த ..மன்னன்
இறைப் பணி  நிறைவடைந்து முடிந்ததை எண்ணி  
இன்பவெள்ளத்தில்  திளைத்தே ..புனித
பம்பாநதிக்கரையில் அடைந்தான் சமாதி..

              சாமியே ஐயப்பா,சரணம்

ஐயப்பசரிதையின் சாரம்..கூறும்
இக்கதைப்பாட்டிசைத்தவாறு மலையேறும்
அன்பர்க்கு மலராகும் முள்ளும்,.அவர்
உள்ளத்தில் பொங்கிடும் உத்சாக வெள்ளம்

               சாமியே ஐயப்பா,சரணம்

மணிகண்டன் மகிமையுரைக்கும் ..இந்த
கதைப்பாட்டைப் பாடுவோர்க்குண்டு நற்கதியே ,
பாடுவதை மெய்யுருகிக்கேட்கும்..பக்தர்
மனத்தினில் நிறைந்தே நிலைக்கும் நிம்மதியே.

சாமியே ஐயப்பா,சரணம் ..தர்ம
சாஸ்தாவே,மணிகண்டா,சரணம்,சரணம்..
சாமியே. ஐயப்பா சரணம்
சாமியே சபரீசா சரணம்
சாமியே மணிகண்டா சரணம் .









2 comments:

  1. சபரி மலை பயண சமயத்தில் அருமையான பதிவு. நன்றி அம்மா.

    ReplyDelete