Tuesday, September 11, 2012

பாரதியாரின் முருகன்பாட்டு

[Bharathi.jpg]                                                              
பாரதியாரின் முருகன்பாட்டு
11th செப்டெம்பர் பாரதியாரின் நினைவுநாள்   )
subbusir sings:
http://kandhanaithuthi.blogspot.in/2012/09/blog-post.html

வீரத்திருவிழிப் பார்வையும் -வெற்றி
வேலும் மயிலும் என் முன்னின்றே -எந்த
நேரத்திலும் என்னைக் காக்குமே;-அன்னை
நீலி பராசக்தி தண்ணருட்-கரை
ஓரத்திலே புணை கூடுதே;-கந்தன்
ஊக்கத்தை என்னுள்ளம் நாடுதே;-மலை
வாரத்திலே விளையாடுவான்-என்றும் 
வானவர் துன்பத்தைச் சாடுவான் . 

வேடர்கனியை விரும்பியே-தவ
வேடம்புனைந்து திரிகுவான்;-தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே -முனி 
நாதனுக்கிம்மொழி கூறுவான் ;-சுரர் 
பாடு விடிந்து மகிழ்ந்திட -இருட் 
பாரமலைகளைச் சீறுவான் ;-மறை 
யேடு தரித்த முதல்வனும் -குரு 
வென்றிட மெய்ப்புகழ் ஏறுவான் . 
  
தேவர் மகளை மணந்திடத் -தெற்குத் 
தீவிலசுரனை மாய்த்திட்டான்;-மக்கள்
யாவருக்குந்தலை யாயினான்;-மறை
அர்த்தமுணர்த்து நல்வாயினான்;-தமிழ்ப்
பாவலர்க்கின்னருள் செய்குவான்;-இந்தப்
பாரில் அறமழை பெய்குவான்;-நெஞ்சின்
ஆவலறிந்தருள் கூட்டுவான்;-நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.

தீவளர்த்தே பழவேதியர் -நின்றன்
சேவகத்தின் புகழ் காட்டினார்;-ஒளி
மீவளருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்
மேன்மையினாலறம் நாட்டினார்;-ஐய!
நீவளருங்குருவெற்பிலே;-வந்து
நின்று நின் சேவகம் பாடுவோம் -வரம்
ஈவள்  பராசக்தி யன்னைதான்-உங்கள்
இன்னருளே யென்று நாடுவோம் -நின்றன் (வீரத்)

No comments:

Post a Comment