Friday, October 28, 2011

அன்பர்க்கருள்புரிவாய்,கந்தா!

அன்பர்க்கருள்புரிவாய்,கந்தா!

  
பன்னிருகரத்தவா! திருநீறு தரித்தவா!
தென்னகம் வந்தமர்ந்தருள்வோனே!
உன்னடிபற்றியே பணிந்திடும் பக்தரின்
முன்னைவினையறுத்தருள்வாயே !

தடைகள்தகர்த்திடும் கணபதி தம்பியே!
விடைவாகனனின் குருநாதா!
படைவீடாறுடைக்கடவுளே! பக்தர்க்கு
அடைக்கலம் தந்தருள் புரிவாயே!

மத்தமாலை முடிசூடிடும் பித்தனின்
புத்திரமணியே! முத்தையா!
சக்திவேலாயுதா! நித்தமுனைத் தொழும்
பக்தர்க்கு முக்திதந்தருள்வாயே !

மாசில்மதியோடு நதிமுடிசூடிடும்
ஈசனிடமுறை உமையாள் மைந்தா!
நேசமாய் நிதமுமுன் நாமம் நவின்றிடும்
தாசர்க்கு தரிசனம் தருவாயே!

பாரதப்போரினில் பார்த்தனின்தேருக்கு
சாரதியான மாதவன்  மருகா!
ஆறேழுத்துள்ள உன்பேரினை பக்தியாய்க்
கூறுமன்பர்க்கருள்புரிவாயே !

வேட்டுவன்மகளையும் வாசவன்மகளையும்
நாடி மணங்கொண்ட நாயகனே!
ஈடிணையற்ற உன் இணையடிபோற்றியே
பாடுமன்பர்க்கருள்புரிவாயே !
=============================================================

2 comments:

  1. http://youtu.be/ITB8LoiCZ80
    or

    http://kandhanaithuthi.blogspot.com

    please log on to either of the above, to listen to your song in Raag Bhageswari

    subbu rathinam

    ReplyDelete
  2. subbu sir,
    thank u so much !
    i listened to the song at 12noon itself;today being "bhaiyaa dhuj"in delhi,i had so many guests fr lunch;so i cudn't reply immediately;
    the song in bhageswari raagam is very nice and touching;thanks once again!

    ReplyDelete